Wednesday 22 May 2013

கூம்பொடு மீப்பாய் களைதல்?

தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி கலம் செலுத்தும் பாடலகளை குறிக்கையில் கூம்பொடு மீப்பாய் களைதல் என்றே கூறுகின்றன.

மீப்பாய் என்பது பாய்மரக் கப்பலின் பாய் மரத்துணியை மட்டும் குறிக்கும். அதனால் அதைக் களைவதோ விரிப்பதோ இப்போதும் நடைமுறையில் இருக்கும் வழக்காகவே தெரிகிறது. ஆனால் கூம்பொடு (பாய் கட்டப்பட்டிருக்கும் மரம் கூம்பு போல் உள்ளதால் கூம்பொடு எனக் கூறப்படுகிறது) மீப்பாய் களைதல் என்றால் கூம்பையும் ஏற்றி இறக்க தமிழர் கலங்களில் வசதி இருந்ததா? என்ற கேள்வி என்னில் எழுந்தது.


யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் - புறநானூறு


போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. - கம்பர் இராமாயணம்


மேலுள்ள இரண்டு பாடல்களுமே மடக்கும் கூம்புகளை தமிழர் கலங்கள் பெற்றிருந்தன எனக் காட்டுகின்றன. கம்பராமாயணம் எழுதிய போது கம்பர் தானறிந்தவற்றை சேர்த்தே எழுதியிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு கப்பல்கள் கூம்பை மடக்கும் நுட்பத்தை பயன்படுத்தினரா என அறிய ஆவல்.

Friday 3 May 2013

ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் தொலைவுலே.

ஒரு முறை நான் என் சகாக்களோடு சில இடங்கள் சுற்றி பார்ப்பதற்காக சிறு வயதில் சென்றதுண்டு. அப்போது எங்கள் குழுவில் கிராமத்துக்காரர்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் ஒருவனும் வந்திருந்தான். அவனுக்கு கிராமத்துக்காரர்கள் எதைச் சொன்னாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் ஏளனம் செய்வதும் பழக்கம். இவனுக்கு என்றைக்காவது '''நல்ல பாடம்''' கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதற்கு ஒரு நாளும் அன்று கிடைத்தது. அந்த அனுபவத்தை விளக்கும் முன்னர் தமிழர் திசைக்குறி சொல்லையும் இடக்குறிச் சொல்லையும் எப்படி பயன்படுத்தினர் என முதலில் அறிந்து கொள்ளலாம்.

நம்மூர் நகரத்தார் எனக்கூறிக் கொள்(ல்)பவர்கள் கூறுவது போல் ஒரு இடத்துக்கு வழிகாட்ட இடது வலது முறையை கிராமத்தில் பயன்படுத்துவதில்லை. மாறாக திசையையே இடச்சுட்டாக கூறுவர். நகரத்தார் முறை பல இடங்களில் குழப்பங்களையே தரும். ஆனால் திசை என்றும் மாறாதது என்பதால் கிராமத்தாரின் இடச்சுட்டு முறையே நிலைத் தெளிவை கொண்டது. இதை கடலோரத்தில் காணப்படும் பரதவர் கலம் செலுத்தும் தொழினுட்பத்தில் எளிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் சற்று வேறுபடும். கடற்பரதவர் காண்பதும் வாழ்வதும் கடல் என்பதால் வர்களுக்கு ஏற்ப சில சுட்டுகலை உருவாக்கிக் கொண்டனர். ஓதம் என்பது ஆங்கிலத்தில் எனப்படும். ஆனால் இதற்கு இணையான சொல்லான ஓதம் என்னும் சொல்லை தமிழர் உயர் ஓதம் (High Tide) தாழ் ஓதம் (Low Tide) என அழைக்காமல் கடல் ஓதம் (Tide towards Sea), கழி ஓதம் (Tide towards Shore) எனக் கொண்டனர்.

 ஒரு இடத்தில் கடல் ஓதம் உயரும் போது மற்ற இடத்தில் தாழும். பல்வேறு துறைமுகங்களில் கலம் செலுத்த வல்ல தமிழர் ஒரு குறிப்பிட்ட நேரக் கணக்கை ஒதுக்கி உயர் தாழ் ஓதம் எனக் குறிப்பிடால் குழப்பங்கள் நேரலாம். அதே மணிக்கணக்கை மற்ற இடங்களில் ஓதம் அறிய பயன்படுத்த இயலாது. அதனாலேயே கடல் நோக்கி ஓதம் வெளியேரும் கலத்தை துறைமுகத்தில் இருந்து வெளிச் செலுத்தவும் கழியை நோக்கி கடல் நகரும் போது கலத்தை உட்செலுத்த வேண்டும் என எளிதாக கொள்ளலாம்.

ஒருவரிடம் உயர் தாழ் ஓதம் கொண்டு கணக்கிடு என்று கூறுவதை விட கழி கடல் ஓதம் கொண்டு கணக்கிடு என்றால் அவனே யூகித்து கலத்தை ஓதத்தின் உதவியோடு செலுத்துவதை எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(High Tide) கடல் ஓதம்(Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். அப்போது நீர் கலத்தை கரை கொள்வதை கொல் ஓதம் என்றனர். ஓதம் குறியும் போது க்டல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.[1] மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியை கலம் ஓட்ட தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.

கழி ஓதம்
கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.[2] இக்கழி ஓதத்தின் போது நீரின் ஆழம் அதிகம் இருக்கும். மேலும் கடல் நீர் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். இதனால் கடலில் மிதக்கும் கலத்தை துறைமுகத்துக்குள் பாறைகளில் மோதாமல் எளிதாக கொண்டு வர முடியும். மேலும் கடல் நீரும் கலத்தை கரை நோக்கி நக்ர்த்துவதால் திமில் போடும் திமிலர்களின் வேலைப்பளுவும் குறையும்.

கடல் ஓதம்

ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம் என்கிறது சிலம்பு.[3] இக்கடல் ஓதத்தின் போது கடல் நீர் கரையிலிருந்து கடல் நோக்கி கலத்தை செலுத்தும். இதனால் கடல் ஓததின் போதே மீனவரும் கடலோடிகளும் கலத்தில் பயணத்தை தொடங்குவர்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350
  2. பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117
  3. ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி

சரி இனி நம் சகாக்களின் கதையை அறியலாம். ஒரு முறை நான் ஒரு கிராமத்தாரிடம் வழி கேட்ட போது  "ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் தொலைவுலே." என்று அவர் பதிலளித்ததும் இவன் பல்லிழித்தான். "இதென்னடா நாகரிகமா சொல்லாம இந்த ஆள் தெக்கால கிழக்காலன்னுட்டு. அறிவு கெட்டவனுங்க." என்று கூற எனக்கு ஏகக்கடுப்பு. இவனை ஏன்டானு கூட்டிட்டு வந்தோம்னு. இவனை வெகுதூரத்தில் அதிகம் உட்கிராமத்துக்குள் நான் அழைத்து சென்றுவிட்டேன் அதுவும் சந்து பொந்துகளுக்குள் எல்லாம் நுழைந்து நல்ல வெட்டவெளிக்கு கூட்டி போயாயிற்று.

வேனும் என்றே கண்ணாம்பூச்சி விளையாட அவனை அழைத்தேன். பாதி விளையாடிக் கொண்டிருக்கும் போது தலைவரின் முறை வந்தது. அவன் கண்ணைக் கட்டியவுடன் அவனிடம் நாங்கள் இடப்பக்கமாக செல்கிறோம் என்று கூறிவிட்டு அவனை நல்ல சுற்றி விட்டு விட்டு நாங்களெல்லாம் மரத்துக்குள் ஓடி மறைந்தாயிற்று. அவனும் எங்களை தேடு தேடு எனத் தேடி வட்டத்துக்குள் நாங்கள் எங்கும் இல்லை என்றவுடன் அவன் கிலியோடு கண்கட்டை அவிழ்த்து பேந்த பேந்த விழித்தான். இடமோ பலமரங்கள் சூழ்ந்திருக்கும் வெட்டவெளி அவனுக்கு நாங்கள் கண்ணை கட்டுமுன் கூறிய இடப்பக்கம் எது என்று இப்போது ஏகக்குழப்பம். தலைவருக்கு வெட்டவெளியில் இருந்து தப்பி வரவும் தெரியவில்லை.

சரி போதும் பையன் அழுதுவிட போகிறான் என நினைத்து "ஏலே! தெக்கால திரும்புனா இரண்டு கல் கல் தொலைவுலே." என்று நான் கூவ அவன் ஏகக்கடுப்பாயிப் போயி விழித்தானே ஒரு விழி. வாழ்நாள் முழுதும் அதை நான் மறக்கவே மாட்டேன்.

இப்போ தெரியுதாலே. "தெக்கால திரும்புனா பத்து கல் தொலைவுலே." அப்படின்னு சொல்றது அறிவாளித்தனமா அல்லது இடது வலது சொல்றது நாகரிகமா என்று. யாருகிட்ட!!!

நாங்கெல்லாம்

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

வம்சம்டா... வம்சம்டா... வம்சம்டா...

இனி ஒரிசா பாலு போன்றவர்கள் உயர் தாழ் ஓதங்களின் இடையிலுள்ள அளவு எங்கெல்லாம் குறைவோ அங்கெல்லாம் தமிழர் தொடர்பு இருக்கும் என்ற ரீதியிலும் தேடலாம். தேடல் சிறிது எளிதாக வாய்ப்புண்டு.

Wednesday 1 May 2013

மருங்கூருக்கும் புகாருக்கும் பெருந்துறை எங்கே?

குறிப்பு:இதைப் படிக்க எண்ணுபவர்கள் முதலில் நான் விக்கியில் தொகுத்த பெருந்துறைமுகம் , முன்துறைமுகம் என்ற இரு கட்டுரையையும் பார்த்து விடுங்கள். பின்பு இதைப் படித்த பின் வாதத்துக்கு வரலாம்.

http://ta.wikipedia.org/s/2r6e - பெருந்துறைமுகம்
http://ta.wikipedia.org/s/2r6c -  முன்துறைமுகம்

மேற்குறித்த இரண்டு கட்டுரையிலும் உள்ள தொகுப்புக்களை நோக்கின் முன்துறை என்ற சொல் கூறப்பட்ட அளவுக்கு பெருந்துறை கூறப்படவில்லை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. அதை கட்டுரையின் இறுதியில் நோக்கலாம். அதற்குமுன் இரு பூம்பட்டினங்கள் என்ன என என்று கண்டு விடுவோம்.

1. ஒன்று  அனைவரும் அறிந்த காவிரிப்பூம்பட்டினம்.
2.  இன்னொன்று சில தமிழார்வலர்களால்  பெயர் சூட்டப்பட்ட வையைப்பூம்பட்டினம். அதாவது மருங்கூர்.

இந்த 2 பட்டினங்களுக்கும் முன்துறை கூறப்பட்டதே அன்றி பெருந்துறை கூறப்படவில்லை. ஆய்ந்து நோக்கின் இப்பெருந்துறைகள் காலப்போக்கில் வேறு ஒரு பெயரில் அழைக்கப்பட்டு புகழடைந்து விட்டதே காரணமாகும் அப்படி நோக்கினால் காவிரிப்பூம்பட்டினத்துக்கும் வையைப்பூம்பட்டினத்துக்கும் முறையே பின்வரும் பெருந்துறைகள் இருந்தன  எனக்கொள்ள முடியும்.

1. மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் புகார் முந்துறைக்கு பெருந்துறைகளாக அமைந்தன.

2. அதைப்போல் வையைப்பூம்பட்டினத்துக்கு ஊணூர் பெருந்துறையாக அமைந்தது.

சங்க இலக்கியச்சான்று 
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.

மேலுள்ள புறத்தின் 349ஆவது பாடல் ஊணூர் தான் வையைப்பூம்பட்டினத்துக்கு பெருந்துறையாக அமைந்தது என்பதை தெளிவுறக்காட்டுகிறது.

ஆய்வறிஞர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுங்கால் இதை நினைவில் கொண்டு கடற்கரையின் முந்துறையை மட்டும் ஆயாமல் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையையும் ஆய்வார்கள் எனில் எளிதில் அதிகளவு தொல்லியற்சான்றுகளை வெளிக்கொணர முடியும் என்பது என் முடிவு.

ஏனெனில் பெருந்துறையிலேயே அதிகளவு ஒப்பநத்தங்களும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.