Sunday 21 May 2017

சகரக் கிளவியும் சங்கமும்

தொல்காப்பியத்தில் சகர வரிசை எழுத்துக்களான ச, சை, சௌ இந்த மூன்றும் மொழி முதல் எழுத்துக்களாக வராது எனச்சொல்லி நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். உண்மையில் தொல்காப்பிய ஓலைச்சுவடிகள் சொல்ல வருவது சகர வரிசை எழுத்துக்களில் சௌ மட்டுமே மொழி முதல் வராது என்றே சொல்கிறது. அதாவது


சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே கடையே


என்று மட்டும் தான் சொல்கிறது. அந்த பாடலை முழுதாக கீழுள்ளது போல் முழுதாக படித்தால் பொருள் புரியும்.


க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோரற்றே கடையே



என்பது தான் முழு பாடலாக இருந்திருக்க வேண்டும். இதன் பொருள் க, த, ந, ப, ம எழுத்துக்களின் வரிசையில் உள்ள 12 உயிர்மெய் எழுத்துக்களும் மொழி முதல் எழுத்து வரும் என்று முதல் இரு வரிப்பாடல்கள் சொல்கின்றன. மூன்றாவது வரியை எளிதாக புரிந்து கொள்வதற்காக கீழுள்ளது போல் பிரித்துத்தருகிறேன்.


சகரக்கிளவியும் - சகர வரிசை எழுத்துகள்
அவற்றோரற்றே - க, த, ந, ப, ம வரிசை எழுத்துக்கள் போல் அனைத்து உயிர் எழுத்துக்களோடும் கூடாமல்
கடையே - கடை எழுத்தான ஔ என்னும் உயிரெழுத்தோடு சேர்ந்து வராது.



இதை இப்போது சேர்த்து படித்து பொருள் கொள்வோம். க, த, ந, ப, ம வரிசை எழுத்துக்கள் 12 உயிரெழுத்துக்களோடு கூடி மொழி முதல் வரும். அதாவது க முதல் கௌ வரையும், த முதல் தௌ வரையும், ந முதல் நௌ வரையும், ப முதல் பௌ வரையும், ம முதல் மௌ வரையும் மொழி முதல் வரும்.


ஆனால் சகர வரிசை எழுத்துக்கள் க, த, ந, ப, ம போல் அனைத்து உயிரெழுத்துக்களோடும் கூடி வராமல் ஔ என்னும் கடையெழுத்து அற்று மற்ற 11 உயிரெழுத்துக்களோடும் கூடி வரும் என்பதே. அதாவது சங்கம், சாத்தன் .... சோலை என்பது எல்லாம் தமிழ் சொற்களே. சௌந்தர்ய, சௌகர்ய போன்ற சொற்கள் தமிழல்ல. அவற்றை தமிழில் எழுதும் போதும் சவுந்தரியம், சவுகரியம் என்று எழுத வேண்டும் என்பதே பொருள்.






ஆனால் ஊவேசாவோ

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே


என்று இல்லாதவற்றை சேர்த்து எழுதியிருக்க வேண்டும். கீழே நான் கொடுத்திருக்கும் ஓலைச்சுவடியில் "அ ஐ ஔ என்னும் மூன்றலங்" என்ற சொற்கள் இல்லவே இல்லை. மாறாக "சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே கடையே" என்று நேரடியாக சொல்லி விடுகிறது. ஆக "அ ஐ ஔ என்னும் மூன்றலங்" என்று ஓலைச்சுவடியில் இல்லாத சொற்களை உவேசா வலிந்து திணித்திருக்க வேண்டும்.




பாவாணர் சொன்ன தவறான வரிகள்:


பாவாணர் நான் சொன்ன கருத்தையே சொல்கிறார் என்றாலும் அவர் தரும் வரிகளும் தவறானவையே. அவர் உவேசா சொன்ன "அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே" என்னும் வரிகளுக்கு பதிலாக "அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே" என்று ஓலைச்சுவடிகளில் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானித்திருக்கிறார். ஆனால் ஓலைச்சுவடியில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று விதை முகநூல் பக்கத்தின் கார்த்திகேயன் மறுத்திருப்பதை பார்க்கவும். கார்த்திகேயன் சொல்வது யாதெனில் "அவை" என்பது பன்மை குறிக்கும் சொல்லாக உள்ளது என்பதும் ஆனால் அதற்கு பிறகு "ஔ" என்னும் ஒரே எழுத்து மட்டும் குறிப்பிடப்படுவதால் "அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே" என்று வந்திருக்காது என்கிறார். நான் இந்த ஒலைச்சுவடியை 2012ல் கண்டெடுத்தாலும் இதை இவ்வளவு நாள் வெளியிடாமல் இருந்தது இதை நூலாக வெளியிடும் போது சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்ததே ஆகும். ஆனால் சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல என்று தலித்தியத்தை சாக்கியவாதம் என்ற புனைப்பெயரில் பேசிவரும் கூட்டதை நம்பி ஏமாந்துவரும் தமிழர்களுக்கு உண்மையை சொல்லவேண்டும் என்பதே.




ஏற்கனவே ஊவேசா இருபிறப்பாளர் என்ற புலையரை குறிக்கும் சொல்லை இழிபிறப்பாளர் என்று மாற்றி படித்ததாகவும் இதன் மூலம் புலையர்கள் பார்ப்பனர்கள் (இருபிறப்பாளர்கள்) என்பதை மறைக்கவே ஊவேசா இழிபிறப்பாளர் என்று மாற்றி படித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. நானும் ஓலைச்சுவடியில் இல்லாத தடவு என்னும் சொல்லை வலியத்திணித்து வேளிர்களை குஜராத்தில் இருந்து வந்ததாக சித்தரிக்கவே உவேசா சித்தரிக்க முயன்றார் என்று ஓலைச்சுவடி ஆதாரத்தோடு நிரூபித்தும் உள்ளேன். வேளிர் தோன்றியது பொதிகை மலையிலேயே என்னும் கட்டுரை தொடரில் முதல் கட்டுரையில் அந்த ஒலைச்சுவடியையும் தந்துள்ளேன். இப்படி ஊவேசா தான் படிக்க இயலாத புரிந்து கொள்ள இயலாத ஓலைச்சுவடியில் தெளிவாக இல்லாத சொற்களுக்கெல்லாம் சங்கத புராணங்கள் அளந்துவிடும் கதைக்கு ஏற்ப ஓலைச்சுவடியில் இல்லாத சொற்களை சேர்த்து தமிழ் அறிவியல் விளக்கங்களை சங்கத புராண விளக்கங்களாக மாற்றி எழுதியுள்ளார் என்று தெரிகிறது. இதற்கு அவர் பிராமணிய சூழலில் பிறந்து வளர்ந்தது காரணமாக இருக்கலாம். இல்லை பிராமணர்களுக்கு தமிழ் மேல் இருந்த வெறுப்பும் காரணமாக இருக்கலாம். எது உண்மை என்பது உவேசா நேரே வந்து சொன்னால் தான் தெரியும். அதனால் படிப்பவர்கள் அனுமானத்திலேயே விட்டுவிடுகிறேன்.
________________




பாவாணர் தான் எழுதிய பண்டைத்தமிழகம் நூலில் இதுபற்றி கூறியதை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். இதை துடிசைக்கிழார் நூலில் இருந்து தருகிறார்.


http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=186&pno=143


________________

இனி மேல் சொன்னதை தொகுத்து கீழே தருகிறேன்.


ஊவேசாவின் வலியப்புகுத்தலும் தவறான வரிகளும். அடிக்கப்பட்ட சொற்கள் ஓலைச்சுவடியில் இல்லாதவை. ஆனால் ஊவேசா வலியத்திணித்தவை.

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே - ஊவேசா


துடிசைக்கிழார் சொன்ன பாவாணர் வழிமொழிந்த சரியான விளக்கமும் தவறான வரிகளும். அடிக்கப்பட்ட சொற்கள் ஓலைச்சுவடியில் இல்லாதவை.


க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே -


நான் கூறும் சரியான வரிகளும் சரியான விளக்கமும்.



க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோரற்றே கடையே
- தென்காசி சுப்பிரமணியன்